சுடுகாட்டில் உடல்கள் திருடப்பட்டு…
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் சுடுகாட்டில் உடல்கள் திருடப்பட்டு மந்திரவாதியிடம் வழங்கப்படுவதாக சந்தேகம் எழுந்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த குழந்தை வேலின் பச்சிளம் குழந்தை உடல்நலக்குறைவால் உயிரிழந்தது.
முதல் குழந்தை என்பதால் உடலை எரிப்பதற்காக செங்குன்றம் நாரவாரிகுப்பம் சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்றுள்ளார். ஆனால் அங்கு குழந்தையின் உடலை மறைத்துவைத்துவிட்டு எரித்ததாக கூறி மயான ஊழியர்கள் சாம்பலை கொடுத்துள்ளனர்.
இதில் சந்தேகம் எழுந்ததால் குழந்தையின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பின்னரே மயான ஊழியர்கள் குழந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்தனர்.இதுகுறித்து குழந்தை வேலு கூறுகையில், குழந்தையின் சடலத்தை எரித்துவிட்டதாக சாம்பலை கொடுத்தனர்.
எங்களுக்கு சந்தேகம் எழுந்ததால் உள்ளே சென்று பார்த்தோம், குப்பைக்குள் குழந்தையின் உடல் இருந்தது. என்ன காரணத்திற்காக இப்படி செய்தார்கள் என்று தெரியவில்லை, இதேபோன்று மற்றவர்களையும் ஏமாற்றத்தான் செய்கிறார்கள் போல.
மந்திரவாதிகளுக்கு சடலத்தை அளிப்பதற்காக இப்படிச் செய்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுமக்களுக்கு இதுபற்றி தெரிந்தாக வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் இந்த குற்றச்சாட்டை ஊழியர்கள் மறுத்துள்ள நிலையில், பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.