புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் முன்னாள் ஜனாதிபதிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் இடையில் இன்று காலை இடம்பெற்ற பேச்சுவார்த்தையொன்றின் பின்னர் பிரதமர் மகிந்த ராஜபக்ச அங்கிருந்து கோபமாக வெளியேறியதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விஜேராம மாவத்தையிலுள்ள மகிந்த ராஜபக்சவின் இல்லத்தில் வைத்து குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இதன்போது கூட்டமைப்பின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றுவேன் என நீங்கள் எழுத்துமூலம் உறுதிமொழி தந்தால் மட்டுமே உங்களுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில் எமது சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் பரிசீலித்து முடிவு எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்க கூட்டமைப்பிலுள்ள 16 எம்.பிக்களின் ஆதரவு தனக்கு மிகவும் அவசியம் என்று மகிந்த சுட்டிக்காட்டியமைக்கே சம்பந்தன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் தனது கருத்தை வலியுறுத்துவதில் சம்பந்தன் உறுதியாக இருந்ததாகவும் எவ்வித விட்டுக்கொடுப்புக்களையும் செய்யவில்லை எனவும் தெரியவருகின்றது.
அத்துடன் இந்த சந்திப்பின் பின்னர் மகிந்த ராஜபக்ச கடும் கோபத்துடன் அங்கிருந்து வெளியேறியதாக தெரியவருகிறது.
குறித்த சந்திப்பின்போது, பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் கலந்து கொண்டிருந்தார்.